துருக்கி நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது.

துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20000 தாண்டி உள்ளது.துருக்கியில் குறைந்தது 14,000 பேர் இறந்துள்ளனர் என்று அந்நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார், அதே நேரத்தில் சிரியாவில் குறைந்தது 3,162 பேர் பலியாகி உள்ளனர்.

பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படுகிறது. துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக 8 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.சிரியாவின் வடக்கு, கிழக்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. சிரியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஓரளவுக்கு மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.