சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (04) ஆர்ப்பாட்டம்.

நேற்றிரவு (03) மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களைக் கலைப்பதற்காக பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று மதியம் முதல் எல்பின்ஸ்டோன் திரையரங்கம் முன்பு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்ததையடுத்து, அந்த இடத்தில் தங்கியிருந்த சட்டத்தரணி நுவான் போபகே மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் நீதிமன்ற உத்தரவு குறித்து பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர்.

இருப்பினும், போராட்டக்காரர்கள் உத்தரவிற்கு இணங்காததால், பொலிஸார் அவர்களை கலைக்க இரவு 9:00 மணியளவில் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டனர்.

இதேவேளை, சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (04) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.