முல்லைத்தீவு ஊடக அமையத்தில் கறுப்பு ஜனவரியை அடையாளப்படுத்தும் நிகழ்வு.

கடந்த 2006ஆம் ஆண்டு இதே போன்ற ஒருநாளில் திருகோணமலையில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வும் கறுப்பு ஜனவரி நினைவேந்தல் நிகழ்வும் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று  இடம்பெற்றது.

இலங்கையில் பல்வேறு ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் கொல்லப்பட்ட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டிருந்த ஊடகவியலார்களை நினைவிலிருத்தி இதற்க்கு நீதி வேண்டி கறுப்பு ஜனவரி ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புகளால் அனுஷ்ட்டிக்கபடுவது வழமை. அந்தவகையில், இதே நாளில் 2010ஆம் ஆண்டு கடத்தி காணாமல் ஆக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதி வேண்டியும் இதே ஜனவரி மாதம் 08ஆம் நாள் ஒன்றில் 2009ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவுக்கு அஞ்சலி செலுத்தியும் இந்த கறுப்பு ஜனவரி நிகழ்வு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இதில் முல்லைத்தீவு ஊடகவியலார்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலார்கள் சுகிர்தராஜன் மற்றும் லசந்த ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு இன்றையநாளில் 2010 இல் காணாமல் ஆக்கப்பட்டிருந்த பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதி வேண்டி அவரது படத்தை தாங்கி மெழுகுவர்த்தி கையில் ஏத்தி நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகரங்களில் கறுப்பு ஜனவரியை அடையாளப்படுத்தி முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் துண்டு பிரசுரமும் விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.