ரதெல்ல பஸ் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்கு விளக்கமறியல்

நுவரெலியா – நானுஓயா – ரதெல்ல பகுதியில் நேற்று முன்தினம் (20) இரவு இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (22) மதியம் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அதிவேகமாக பயணித்த பஸ் ஒன்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி இடம்பெற்ற குறித்த விபத்தில் 7 பேர் உயிரிழந்திருந்தனர்.

விபத்து குறித்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 62 வயதுடைய பஸ்ஸின் சாரதியை நேற்று கைது செய்திருந்தனர்..பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது குறித்த பஸ் கவனக்குறைவாக செலுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதிவேகமாக வந்த பஸ் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் 41 பேரும் அவர்களது பெற்றோர்கள் உட்பட 53 பேரும் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.