யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவத்தினரின் அத்துமீறலுக்கு கண்டனம்.

தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதித்தடைகள் மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல்களை மேற்கொண்டதை நாட்டின் பழமையான இடதுசாரிக் கட்சியான நவ சமசமாஜக் கட்சி கண்டித்துள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்கும் அவர்கள் எதிர்பார்த்த நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரை எந்த நம்பகத்தன்மையான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார் என்று நவ சமசமாஜக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் நீதி கோரி மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவ சமசமாஜக் கட்சியின் அரசியல் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.