சுதந்திர தின விழாவில் இம்முறை ஜனாதிபதியின் உரை இடம்பெறாது! நிகழ்வின் இறுதியில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படும்!!

ஆர்.சனத்

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
75 ஆவது சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.இதன்போதே நிகழ்வின் ஆரம்பத்தில் சிங்கள மொழியிலும், விழாவின் இறுதியில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார். “”நமோ நமோ மாதா – நூற்றாண்டுக்கு ஒரு படி” என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திரதின விழா நடைபெறவுள்ளது.
சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஜனாதிபதி செயலக வளாகத்தில் உள்ள தேசிய மாவீரர்களின் உருவச்சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் வைபவம் ஆரம்பமாகவுள்ளது. முப்படைகள், பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெறும். ஆயிரத்து 12 பாதுகாப்பு தரப்பினர் பங்கேற்கவுள்ளனர்.” – எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
“ஒன்றரை மணிநேரத்துக்குள் சுதந்திர தின நிகழ்வை நடத்தி முடிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே, பிரதான சுதந்திர தின நிகழ்வின்போது ஜனாதிபதியின் தேசிய உரை இடம்பெறாது. அன்று மாலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
அத்துடன், 2048 ஆம் ஆண்டு 100 ஆவது சுதந்திர தினம் வரை மாறாத அரச கொள்கையை அமுல்படுத்தும் வகையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு அரசின் புதிய சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் அறிவிக்கப்படும். ” – எனவும் அவர் குறிப்பிட்டார்.