ஈஸ்ரர் பயங்கரவாத தாக்குதல்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக, போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாதமை மூலம், தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர்கொண்ட நீதியரசர்கள் ஆயம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபாவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.