உடல்நலம் மிகவும் குன்றிய நிலையில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

அமைதியில் திருஅவைக்கு ஆதரவளித்துவரும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 28, இப்புதனன்று, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் நடைபெற்ற புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு திருப்பயணிகளிடம் இவ்வாறு வேண்டுகோள்விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், உடல்நலம் மிகவும் குன்றியுள்ள முன்னாள் திருத்தந்தைக்கு ஆண்டவர் ஆறுதளிக்குமாறும், தன் வாழ்வின் இறுதிவரை திருஅவை மீதுள்ள அன்புக்குச் சான்றுபகர்வதில் அவரை ஆண்டவர் பேணிக்காக்குமாறும் அவருக்காகச் செபியுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், போரினால் உருகுலைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களின் அமைதிக்காக இறைவேண்டல் செய்யுமாறும் திருப்பயணிகளிடம் விண்ணப்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரினால் காயமுற்றுள்ள அம்மக்களின் இதயங்களுக்கு ஆறுதல் அளிப்போம் என்றும் கூறியுள்ளார்.

பெத்லகேமில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் அன்பு, உக்ரைன் மற்றும் உலகின் பிற பகுதிகளில் நிகழ்ந்து வரும் போர் ஏற்படுத்தியுள்ள துயரங்களால்  கலக்கமடைந்துள்ள அவர்களின் இதயங்களுக்கு ஆறுதலை வழங்கட்டும் என்றும்,  மனிதகுல வரலாற்றில் இறுதி வார்த்தை கடவுளுடையது என்பதை நினைவில் கொள்வோம், ஏனென்றால் ‘எல்லாமே கடவுளின் அன்பிற்குச் சொந்தமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறுதியில், புனித கிறிஸ்மஸ் மற்றும், புதிய ஆண்டு, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்வு மற்றும் அமைதியை நிரம்பக்கொணர்வதாக என்று வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.