பிளவுபட்டு நிற்பதால் கூட்டமைப்பு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது தேய்பிறையாக மாறி, அமாவாசையை நோக்கிச் செல்வது போன்று இருக்கின்றது. இதனால் ஏற்படப்போகும் இருள் கட்சிக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும்தான் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்தார். சூம்’ செயலி ஊடாக நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

திருமதி அனந்தி சசிதரன் அருந்தவபாலன் போன்று பலரை தமிழரசுக் கட்சிதான் வெளியேற்றியது. எல்லோரும் பிரிந்து செல்கின்றார்கள். ஆரம்பத்தில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பின்பு 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது 10 பேர் என்று கூட்டமைப்பின் ஆதரவு சுருங்கி வருகின்றது. கூட்டமைப்பு இப்போது தேய்பிறையாக மாறி, அமாவாசையை நோக்கிச் செல்வது போன்று இருக்கின்றது. இதனால் ஏற்படப்போகும் இருள் கட்சிக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும்தான் எனக் குறிப்பிட்டார்.

எமது கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் மூன்றாம் இடத்தையே பெற்றது. முதலிடத்தில் சிங்கள தேசியக் கட்சி பெற்றது. நாம் இன்னமும் பிரிந்து – பிளவுபட்டு நிற்போம் என்றால் உடுப்பிட்டித் தொகுதியில் கிடைத்த இடம்தான் எல்லாத் தொகுதிகளிலும் கிடைக்கும். வீட்டுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நிலைமை இப்போது மாறிவிட்டது. நாம் பிளவுபட்டுநிற்பதால் கூட்டமைப்பு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் எனத் தெரிவித்தார். இதற்குகாரணம் கூட்டமைப்பின் தலைமைதான்.

ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் தான்தோறித்தனமான முடிவுகளுக்கு இடம்கொடுத்தமையால்தான் இந்த நிலைமை ஏற்பட்டது.எதிர்காலத்தில் கட்சியில் ஒரு நிபுணத்துவக் குழுவை அமைத்து கட்சியை ஜனநாயகப் பண்பாக மாற்றுவோம். முதலில் தமிழரசுக் கட்சியைச் சீர்திருத்த ஒரு நிபுணர் குழுவை அமைப்போம்.தமிழரசுக் கட்சியை சீராக்கி விட்டு அதன் பின்னர் ஏனைய கட்சிகளை விமர்சிப்பதே பொருத்தம். தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்தே இனிவரும் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும்’  என அவர் தெரிவித்தார்.