வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்த ஏற்பாடு.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.

மேலும், வடக்குக் கல்வித்துறை சீர்கேடுகள் தொடர்பில் 100 பக்க முறைப்பாடு தம்மால் ஆளுநருக்கு வழங்கப்பட்டது. அதற்கு அமைவாக விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், விசாரணை அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை.

மேலும், மூன்றாம் தவணை ஆரம்பித்த போதும் இரண்டாம் தவணைப் பரீட்சையை வைக்க முடியாத அளவுக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் நிலைமை உள்ளது.இந்த விடயங்களைச் சீர்செய்ய வலியுறுத்தியே தமது போராட்டம் அமையவுள்ளது என அவர் தெரிவித்தர்.