எமது ஆட்சியில் எந்த சந்தர்ப்பத்திலும் கொள்ளையர்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது-எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச.

நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். தேசிய சொத்துக்களை கொள்ளையிட்ட அனைவரும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவலை தேர்தல் தொகுதி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்குள்ள ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும்.

எமது ஆட்சியில் எந்த சந்தர்ப்பத்திலும் கொள்ளையர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. தேசிய சொத்துக்களை கொள்ளையிட்ட அனைவரும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், போதைப்பொருள் கடத்தல் சிறப்பாகவே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

44 இலட்சம் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் முன்னெடுக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக எமது ஆட்சியில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை எமது அரசாங்கத்தில் பொறுப்பேற்கவுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்பன முற்றாக ஒழிக்கப்படும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கக் கூடிய சிறந்த நிபுணர்கள் எம்மிடம் உள்ளனர்.

சர்வ பொருளாதார முறைமையொன்றை ஐக்கிய மக்கள் அரசாங்கம் இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தும். ஏற்றுமதியை கேந்திரமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கி நாட்டை முன்னேற்றுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.