புடின் மிரட்டலைத் தவிர்க்க வேண்டுமானால் பிரித்தானியர்கள் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்: பிரித்தானிய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புடின் போன்றவர்களுடைய மிரட்டலைத் தவிர்க்க வேண்டுமானால், பிரித்தானியர்கள் மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என பிரித்தானிய நிதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது புடின் போர் தொடுத்துள்ளதன் தாக்கம் பலநாடுகளில் எதிரொளிக்கின்றது.

குறிப்பாக ஆற்றலுக்காக ஐரோப்பிய நாடுகள் பல ரஷ்யாவை சார்ந்திருந்த நிலையில், தற்போது ரஷ்யா கைவிட்டதால் பல நாடுகள் எரிவாயு விடயத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதன் தாக்கம் குறித்து பிரித்தானியர்கள் நன்கு அறிந்துள்ள நிலையில், ஆற்றலை சேமிப்பது தொடர்பில் மக்களும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் என்று பிரித்தானிய நிதி அமைச்சரான ஜெரமி ஹண்ட் கூறியுள்ளார்.

ஆகவே, மக்களும் தங்கள் ஆற்றல் கட்டணம் குறித்து முடிவெடுத்து, தாங்கள் எப்படி ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்கப் போகிறோம் என்பதை திட்டமிடவேண்டும்.
புடின் போன்றவர்கள் சர்வதேச அளவில் ஆற்றல் விநியோகம் போன்ற விடயங்களில் இடையூறு செய்யும்போது, நாமும் புடின் போன்றவர்களின் மிரட்டல்களுக்கு ஆளாகக்கூடாதென்றால், தேசிய அளவில் அதற்காக நாமும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் ஹண்ட் குறிப்பிட்டார்.

சுருக்கமாகச் சொன்னால், உங்கள் வீடுகளை வெப்பப்படுத்தும் கருவியை குறைவான அளவில் வைத்து பயன்படுத்துங்கள், அல்லது வேறு வார்த்தைகளில் கூறினால், வீட்டை குறைவான வெப்பத்தில் வெப்பப்படுத்துங்கள். அப்படிச் செய்தால் தான் புடின் போன்றவர்களின் மிரட்டலை நிறுத்த முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.