FIFA-உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி வெற்றி.

நேற்று நள்ளிரவில் லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டீனா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. முன்னதாக சவுதி அரேபியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஜென்டினா அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்த இரு போட்டிகளிலும் அர்ஜென்டினா வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதேபோல் மெக்சிகோ அணி, போலாந்து அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் டிரா செய்திருந்தது. இந்த சூழலில் பரபரபாக தொடங்கிய இன்று ஆட்டத்தில் முதல் பாதியில் எந்த அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அப்போது அர்ஜெடீணா அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64 வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் மெக்சிகோ அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்தனர். இதனையடுத்து ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் அர்ஜெண்டீனா அணியின் பெர்னான்டெஸ், தனது அணிக்காக இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாம் பாதியில் 6 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.

அதில் கோல்கள் எதுவும் அடிக்கப்படாத நிலையில், அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றியை பதிவு செய்தது.