யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பஸ் கோர விபத்து : மூவர் பலி, பலர் காயம்

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.

இன்று சனிக்கிழமை (05) நள்ளிரவு 12.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நொச்சிமோட்டை பாலத்தில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போது பஸ் சாரதியான ரூபன் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், குறித்த பஸ்ஸில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்துக்கொண்ட மற்றுமொரு சொகுசு பஸ்  சாரதி தனது பஸ்ஸை விபத்து ஏற்பட்டுவதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு விபத்தை தவிர்த்திருந்தார்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.