நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகள் விவகாரம்: நான்கு நாட்களில் அறிக்கை தாக்கல்.

நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவான விவகாரத்தில், நான்கு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு திருமணமாகி ,நான்கு மாதங்கள் ஆகின்றன. இந்த நான்கு மாதங்களிலேயே, இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக, விக்னேஷ் சிவன் தகவல் வெளியிட்டார். வாடகை தாய் சட்டப்படி திருமணமாகி ஐந்து ஆண்டுகள் வரை குழந்தை பேறு இல்லாதவர்கள் மற்றும் தம்பதியில் ஒருவருக்கு குழந்தைபேறுக்கு தகுதி இல்லாத பட்சத்தில், உரிய விதிகளை பின்பற்றி வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறலாம்.

ஆனால் நயன்தாரா விவகாரத்தில், திருமணமான நான்கு மாதங்களிலேயே வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றது பல்வேறு சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்ககத்தின் சார்பில், மூவர் குழு விசாரணை நடத்தி வருகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும், 2016ல் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்தாண்டு டிசம்பர் மாதமே வாடகை தாயை பதிவு செய்து குழந்தை பெற்றதாகவும், விசாரணையில் தகவல் வெளியானது. இந்த தகவலை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.