இந்து மதத்தினரை அவமதித்துவிட்டதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை பெரியார் திடலில் கடந்த மாதம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் இந்து மதத்தினர் குறித்து ஆ.ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ஆ.ராசாவின் பேச்சு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ஆ.ராசா மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்து மதத்தினரை அவமதித்து விட்டதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தொடர்ந்த மனுவை ஐகோர்ட்டு அதிரடியாக தள்ளுபடி செய்தது. ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என கூறு வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.