மகளிர் ஆசிய கோப்பை: இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி

வங்கதேசத்தில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 8-வது சீசன் நடந்து வருகிறது. இதில், 6 முறை கோப்பை வென்ற இந்தியா, நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் இன்று சில்கெட்டில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிடா தார் 37 பந்துகளில் 56 ஓட்டங்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதை தொடர்ந்து 138 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க வீராங்கனை மேகனா 15 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா 2 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தனர். அனுபவ வீராங்கனைகள் மந்தனா (17 ஓட்டங்கள் ), தீப்தி (௧௬ ஓட்டங்கள் ), கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் (12ஓட்டங்கள் ) எடுத்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் இந்திய அணி 19.4 ஓவர்களில் 124 அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில் துடுப்பாட்டத்தில் அசத்திய நிடா தார் பந்துவீச்சிலும் 2 விக்கெட்களை கைப்பற்றினார். நஸ்ரா சந்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் அணியை பலமுறை பந்தாடியுள்ள இந்திய அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.