3-வது டி20 போட்டி: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்ததால் தொடர் 1-1 என சமனடைந்து இருந்தது.

3வது டி20 போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பில் சால்ட்- வில் ஜாக்ஸ் களமிறங்கினர்.

முகமது ஹஸ்னைன் பந்துவீச்சில் முகமது நவாசிடம் பிடிகொடுத்து பில் சால்ட் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் 22 பந்துகளில் 40 ஓட்டங்கள் அடித்து சிறப்பான பங்களிப்பை வழங்கினார். பின்வரிசையில் பென் டக்கெட்- ஹாரி ப்ரூக் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். சிக்சர் மழைகளை பொழிந்த ஹாரி ப்ரூக் 35 பந்துகளில் 81 ஓட்டங்களும் , பென் டக்கெட் 42 பந்துகளில் 70 ஓட்டங்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களை குவித்தது. 222 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. கேப்டன் பாபர் மற்றும் ரிஸ்வான் தலா 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் .

அந்த அணியில் ஒருமுனையில் ஷான் மசூத் நிலைத்து நின்று அதிரடி காட்டினாலும் மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. குஷ்தில் ஷா தனது பங்கிற்கு 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டழிந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.