பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் 3-ம் சார்லஸ் உடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திப்பு

2-ம் எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தொடர்ந்து 24 மணி நேரமும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அரசு முறை பயணமாக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்றுமுன்தினம் இங்கிலாந்து சென்றடைந்தார்.

அவர் நேற்று  2-ம் எலிசபெத்தின் உடலுக்கு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்தினார். இன்று நடைபெற உள்ள 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியிலும் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். தொடர்ந்து ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, லண்டனில் உள்ள லான்காஸ்டர் மாளிகையில் ராணி 2-ம் எலிசபெத்துக்கான இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டனில் உள்ள லான்காஸ்டர் மாளிகையில் ராணி 2-ம் எலிசபெத்தின் நினைவாக இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்’ என்ற பதிவிட்டுள்ளது. இந்த நிலையில், ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக, நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசை, ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார்.