யாழ்ப்பாணம் – சிறுவர்களை வியாபாரம், யாசகத்திற்கு பயன்படுத்தலை கட்டுப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு-

சிறுவர் வியாபாரம் மற்றும் சிறுவர்களை யாசகத்திற்கு பயன்படுத்தலை கட்டுப்படுத்துவதற்கான துறைசார் கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை (16) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் சிறுவர்களைப் பயன்படுத்தி யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு, பதிவில்லாத விடுதிகளை கண்காணித்து சட்டநடவடிக்கையெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பொது இடங்களில் நிகழும் சமூகச்சீர்கேடுகளை தடுத்தல் மற்றும் கண்காணித்தல், போதைப் பொருள் பாவனை மற்றும்  போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மையங்களை உருவாக்குதல், மாவட்ட மற்றும் சிறுவர் உத்தியோகத்தர்கள் ஊடாக மாணவர்களின் ஒழுக்கநெறிகளை மேம்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந் நடவடிக்கைகள்  உணர்வுபூர்வமான விடயமாகும். எமது சமூகத்தினை பேண வேண்டியது எமது கடமையாகும். அனைவரும்  இணைந்து கூட்டுப்பொறுப்புடன் இந் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், சட்ட வைத்தியர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மாகாண பிரதிக் கல்வி பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர், மாவட்ட மற்றும் பிரதேச  செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.