அரசி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு திருத்தந்தை இரங்கல்

வத்திக்கான்

இயேசு கிறிஸ்து மீதுள்ள நம்பிக்கையின் உறுதியான சான்றாகவும், அவரது வாக்குறுதிகளின் மீது  பற்றுறுதி  கொண்டவராகவும் வாழ்ந்த பிரித்தானிய அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களது மறைவு ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என்று  தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 8 இவ்வியாழனன்று 96 வயதில் இறைபதம் சேர்ந்த பிரித்தானிய அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களின் மறைவு குறித்து, அவரது மகனான அரசர் மூன்றாம் சார்லஸ்க்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதியன்று அரசியாக முடிசூட்டப்பட்டு, இவ்வாண்டு ஜூன் 2ல் 70ம் ஆண்டு பவள விழாவைக் கொண்டாடிய அரசி இரண்டாம் எலிசபெத் அவர்கள் நாட்டின் நலனுக்காக கறைபடாமல் பணியாற்றியவர் என்றும், கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டிருந்த நம்பிக்கையின் உறுதியான சான்றாக வாழ்ந்ததுடன், இறைவனின் வாக்குறுதிகளில் பற்றுறுதியும், பணியில் நேர்மையும் கொண்டவர் என்றும் பாராட்டியுள்ளார் திருத்தந்தை.

மேலும், அரசியின் மறைவு குறித்து வருந்துபவர்களுக்கு தன் ஆறுதலை வழங்குவதுடன், அவரின் ஆன்மா நிறையமைதியடையத் தான் செபிப்பதாகவும், அரசராக தன் பொறுப்புக்களை ஆற்றும் மூன்றாம் சார்லஸ் அவர்களை இறைவன் நிறையருளால் உறுதிப்படுத்தவும், எல்லாவிதமான ஆற்றலை அளிக்கவும் தான் செபிப்பதாகவும் திருத்தந்தை தன் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.