கடன் சலுகை தொடர்பிலான நிலைப்பாட்டை தளர்த்துமாறு சீனாவிடம் ஜனாதிபதி கோரிக்கை.

இலங்கைக்கான கடன் சலுகை தொடர்பிலான நிலைப்பாட்டை தளர்த்துமாறு சீனாவிடம் கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானின்  நிக்கேய் ஏசியா இணையத்தளத்திற்கு கூறியுள்ளார்.

சீனாவுடனான கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவது இலகுவான விடயமல்ல என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.கடன் வழங்கும் அனைத்து தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பது அவசியம் என்பதனால், கடன் மறுசீரமைப்பு தேவையென சீன அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நிக்கேய் ஏசியாவிற்கு தெரிவித்துள்ளார்.

சீனா கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வேறு நடைமுறையை பின்பற்றுவதனால், ஏனைய தரப்பினரும் இணங்கும் திட்டமொன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.சீனாவின் நிலைப்பாட்டை மாற்றியமைப்பது இலங்கையின் தற்போதைய ஜனாதிபதிக்குள்ள பாரிய சவால் என நிக்கேய் ஏசியா  குறிப்பிட்டுள்ளது.