யாழ்ப்பாணத்தில் சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று தகாத உறவு : ஐவர் கைது: சிறுமிகள் விளக்க மறியலில்

யாழ்ப்பாணத்தில் சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று தகாத உறவு கொண்ட குற்றச்சாட்டில் ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிகள் இருவர் வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் வந்து பேருந்து நிலையத்தில் இருந்துள்ளனர். அவர்கள் தொடர்பில் அறிந்த ஆண் ஒருவர், சிறுமிகள் இருவரையும் அழைத்துச் சென்று சாவகச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

நேற்று முன்தினம் அந்த விடுதியிலிருந்து வெளியேறிய மூவரும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர்.அன்றைய தினம் இரவு வாகனம் ஒன்றில் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் என மேலும் நால்வர் இணைந்து வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாழ் பற்றைக் காட்டுக்குள் சிறுமிகளை அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்போது சிறுமி ஒருவர் சாதுரியமாகப் பேசி வாகனத்திலிருந்து இறங்கி எழுதுமட்டுவாழில் மக்கள் வாழும் பகுதிக்கு வந்துள்ளார். வீதியில் சென்றவர்களிடம் நடந்தவற்றை தப்பிவந்த சிறுமி தெரிவித்த நிலையில் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவிக்கபட்டது.

மற்றைய சிறுமியுடன் சென்ற ஐவரும் மறுநாள் யாழ்ப்பாணம் நகருக்கு அழைத்து வந்து சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சிறுமிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவர் கைது செய்யப்பட்டனர். வீட்டைவிட்டு வெளியேறி வந்து துர்நடத்தையில் ஈடுபட்டமையினால் சிறுமிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.