அதிமுகவின் நலனுக்காக சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை இணைத்துக்கொள்ள தயார் ஓபிஎஸ் தெரிவிப்பு.

திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள் என டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

இபிஎஸ் தலைமையிலான ஜூலையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், ஓபிஎஸ் சாதகமாக நேற்று தீர்ப்பு வந்த நிலையில், இன்று காலை ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.

அப்போது, அன்பு சகோதரர் இபிஎஸ் மற்றும் நானும் சேர்ந்து சிறப்பாக வழிநடாத்தினோம். இரட்டை தலைமை பிரச்சனை இல்லை. மீண்டும் ஒற்றுமையுடன் செயல்பட விரும்புகிறேன் என்றும், அதிமுகவின் நலனுக்காக சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை இணைத்துக்கொள்ள தயார் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே.’ என பதிவிட்டுள்ளார்.