அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார், கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான  இலங்கை மக்கள் இந்த நெருக்கடிக்கு  ஜனாதிபதியாக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டம் கடந்த மாதம் தொடக்கத்தில் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து ஜூலை 13-ந் தேதி கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பி ஓடினார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினமா செய்தார். சிங்கப்பூரில் அவரது விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 11-ந் தேதி தாய்லாந்துக்கு சென்றார்.

தலைநகர் பாங்காக்கில் உள்ள ஓட்டல் அறையில் தங்கியிருக்கும் அவரை பாதுகாப்பு காரணங்களுக்காக அறைக்குள்ளே இருக்கும்படி தாய்லாந்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் கோத்தபய அடுத்த வாரம் தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்பவார் என அவரது உறவினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். கோத்தபய வருகிற 24-ந் தேதி இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.